ஆலைப் பண்ணைத்துறை தீயது
Published by Arun Isaac on
In other languages: English
Tags: சுற்றுச்சூழல்
ஆலைப் பண்ணைத்துறை மனிதநேயமற்ற செறிவுநிலை கால்நடை முறை. இது மன ஈரமற்றது மட்டுமன்றி சுற்றுச்சூழலுக்கும் சமுதாயத்திற்கும் கேடு விளைவிப்பது.
கிறுஸ்தவ எண்ண அடித்தளத்தினாலேயோ மனிதம் (humanism) எண்ண அடித்தளத்தினாலேயோ பிற உயிர்கள் நம் தேவைக்கு மட்டுமே இருக்கின்றன, அவற்றை என்ன வேண்டுமானாலும் செய்யலாமென நினைக்கிறோம். இவ்வாறு நாம் நமக்கே அளித்த உரிமையை ஆலைப் பண்ணைத்துறை மட்டிலா உச்சத்திற்கு எடுத்துச் செல்கிறது. கடும் அடைப்பு, கோழி அலகு வெட்டல், மாடு பன்றி வால் வெட்டல் எனக் கொடுமைப் பல. இது அடிப்படை மனிதநேயம் கூட இல்லாச் செயல்.
ஆலைப் பண்ணைகள் ஆற்றல் தீனி எனப் பல உள்ளீடுகளை அதிகம் சார்ந்திருக்கின்றன; பரவலாக காடுகளை அகற்றி அன்னிலத்தில் வளர்த்த சோளம் சோயா போன்றத் தீனிகளைப் பயன்படுத்துவது. புதைபடிம எரிபொருளாற்றல் மூலம் இவ்வாலைகளுக்குள் தீனி கொண்டுவரப்படுகிறது, கழிவு அகற்றப்படுகிறது. உரமாகப் பயன்படுத்த இயன்ற எருவை இப்போது அடர்கழிவாக அகற்ற வேண்டியிருக்கிறது. ஆலைப் பண்ணைத்துறையின் சுற்றுச்சூழல்த் தாக்கம் மிகக் கொடியது. ஆலைப் பண்ணைத்துறை ஆதரிப்பவர் உலகின் உணவுத் தேவைகளைச் சிறிய இடத்திலேயே நிறைவேற்றி பிற இடைத்தை இயற்கையிடம் திரும்பிக் கொடுக்க உதவுகிறதென்பார். ஆனால் இது முதலாளித்துவ பொருளியலில் நடக்க வாய்ப்பேயில்லை. உற்பத்தி செறிவடைவதால் விலைவாசி குறைந்து மக்கள் அப்பொருளை அதிகம் பயன்படுத்தத் தொடங்குகின்றன. அதனால் வினைத்திறன் (efficiency) முன்னேற்றத்தால் பயன் இல்லை. இத்தகைய பொருளாதார எதிர்வீச்சு ஜெவண்ஸ் முரண்பாடு எனப்படுகிறது. உலகில் அதிகரிக்கும் ஊன் உணவு இதற்கு அத்தாட்சி.
ஆலைப் பண்ணை ஆதரிப்பவர் அது உலக உணவு தேவையை நிறைவேற்றுவதற்கும் குறைந்த விலையில் உணவு உற்பத்தி செய்வதற்கும் ஒரே முறை என்பார். ஆனால் இதுவும் பொய். உணவு வறுமை முதலில் ஏன் இருக்கிறது?—நம் முதலாளித்துவ பொருளியலினாலும் அது உருவாக்கும் ஏற்றத்தாழ்வினாலும். நம்மை ஆளும் ஆதிக்கக் கொள்கை முதலாளித்துவத்தை எதிர்க்காது தொழில்நுட்பத் திருத்தங்களை மட்டும் மேற்கொள்ள விரும்புகிறது. போதிய உணவு உற்பத்தி இல்லை என்பது நமது மெய்ச் சிக்கலன்று. இருக்கும் உணவை நாம் சரியாகப் பகிர்வதில்லையென்பதே நமது மெய்ச் சிக்கல். இருக்கும் உணவை தாராளமாக அனைத்து மக்களிடையேயும் நாடுகளிடையேயும் பகிர்வதே நீதியின் தீர்வு. இந்த எளிமையானத் தீர்வு நம் மனத்திற்கு எட்டாதது தற்கால உலகின் மனநிலையைக் காட்டுகிறது. பிழைக்கத் தெரியாதவனென என்னைத் துறத்தும் முன் இத்தகைய பகிர்விற்கு வரலாற்றில் முன்மாதிரி இருக்கிறதெனச் சுட்ட விரும்புகிறேன். ஒரு நூற்றாண்டிற்கு முன், இரண்டாம் உலகப் போரின் போது, இன்னாடு (ஜக்கிய முடியரசு) உணவை rationing முறையில் அனைத்து மக்களுக்கும் பங்கிட்டது. இதனால் அனைவரின் உடல்நலமும் மேம்பட்டது ஆயுளும் நீண்டது. செல்வர் அதிகம் உண்ண முடியாததால் நலமடைந்தனர்; வறியவர் போதிய அளவு உண்ண முடிந்ததால் நலமடைந்தனர்.